Monday, February 18, 2008

காதல் தவம்


"நீ
பட்டாசு வைப்பதை விட
அதிக நேரம்
வெளியில் நின்று விளக்கு வைப்பதால்
தீபாவளியை விட
கார்த்திகை பிடித்திருக்கிறது
எனக்கு."

"என் வீட்டு
நாள் காட்டியை
நான் கிழிப்பதேயில்லை.
உன்
பிறந்த தினத்திலிருந்து."

"உன்னிடமிருந்து
எதிர்பார்த்து.. எதிர்பார்த்து
ஏமாந்த அழைப்புகள்.
பதிலாக... பயனற்றே கிடந்திருக்கலாம்
என்
தொலைபேசியும்,கைப்பேசியும்."

"எனக்காக
என்ன செய்திருக்கிறாய் என்கிறாய்.
எப்படி முடியும்...
என்னையே நான்
தொலைத்த பின்பு."

"உன் வருகைக்காக
காத்திருக்கும் நேரத்தில்
உதவும் என்றுதான்
வாங்கிய வார இதழ்.
வெறுமனே பலமுறை
பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்...
அதுவும் தலைகீழாக..!"

"ஒவ்வொரு முறை
உன்னை
சந்திக்கும் பொழுதும்,
யோசித்து வைத்திருந்த
வார்த்தைகளைப்
பேசியதே இல்லை."

"இந்த
சந்திப்பின்போதுகூட
உனக்கான
என் பரிசைக் கொடுக்கவில்லை
வாங்கி வந்திருந்தும்."

"நீயே
எல்லாமுமாக இருக்கும்போது
எப்படிச் சொல்வேன்..
இந்தக் கவிதையை
நான்தான் எழுதினேனென்று."

-த‌.பிரபு குமரன்

No comments: