Tuesday, March 18, 2008

காதல் கண்ணாமூச்சி














"என்னைப் பிடிக்கவே பிடிக்காது...
என்றாய்.... உன் மீதெனக்குக்
காதல் வந்த பொழுது.
இருக்கட்டும்...
பிடித்தா சாப்பிடுகிறாய் மாத்திரையை...
காய்ச்சல் வந்த பொழுது?"

"என்னோடு பேசாதே...என்கிறாய்.
போகட்டும்..
கைகள் கோர்த்து,
நடந்தபடியாவது இருப்போம்.!!"

"பொழுது போகவில்லையென
பல்லாங்குழி விளையாடுகிறாய்...
பக்கத்து வீட்டுக் குழந்தையுடன்.
மாறாக. என்னோடு விளையாடேன்..
காதல் கண்ணாமூச்சி.!!"

"எதிர்பாராத நிமிடங்களைப்
பரிசளிக்கிறாய்....
உன் வருகைகளில்.
குழந்தையின் கையில்
திடீரெனத் திணிக்கப்பட்ட
பொம்மையைப் போல.!!"

"பயணங்கள் மிகவும் பிடிக்குமென்றேன்.
பதிலுக்கு.. எனக்கும்தான் என்றாய்.
பின் என்ன யோசனை....
நிறுத்தங்களற்ற
நம் காதல் பயணத்திற்கு.!!"

"என் காதல் உனக்குள்ளும்
வேர் விட்டது.
பிறகு வெட்கங்களாய்ப்
பூக்க ஆரம்பித்தாய்.!!"

"என் மடியில்
குழந்தையாக வேண்டும்
என்கிறாய் நீ.
எனக்கோ...
உன் பெயர் தவிர
வேறெந்தத் தாலாட்டும் தெரியாது.!!"

-த.பிரபு குமரன்

Thursday, March 6, 2008

நீயும் மருதாணியும்.....













"நீ
பறிக்கும் பொழுது
வெட்கப்படும்
மருதாணி இலைகள்
பின்
உன் விரல்களில்
சிவக்கின்றன.!!"

"உன் ஒவ்வொரு விரலுக்காய்
உருட்டி உருட்டி நீ
மருதாணி இடுகிறாய்.
இருப்பினும்
தன் முறை வருவதற்குள்
ஏங்கிப் பரிதவித்துப் போகின்றன..
சும்மா இருக்கும் விரல்கள்.!!"

"நீ
மருதாணி வைத்திருந்த
நகங்களை
வெட்டிக் கொண்டிருந்தாய்.
தரையில்
குட்டிக் குட்டியாய்
கலர் பிறைகள்.!!"

'நீ ஒரு கையில்
மருதாணி இட்டு விட்டு
மறு கையில் வைக்க முடியாமல்
தவிக்கும் தருணங்களை...
எனக்குப்
பரிசளிப்பாயா?!"

"மருதாணியைப் பார்த்ததும்..
யோசிக்காமல் அழிக்கிறாய்
பார்த்துப் பார்த்து
வாங்கிப் பூசிய
நகச்சாயத்தை.!!"

"நல்லா சிவந்திருக்கா..
நல்லா சிவந்திருக்கா..
கையைக் காட்டி
எல்லோரிடமும் கேட்கிறாய்.
கண்ணாடியில் பாரேன்..
கையா, முகமா என்று.!!"

த.பிரபு குமரன்

Sunday, March 2, 2008

பால்ய சிநேகிதன்



முதன்முதலாய் தெருவில் விளையாட வந்தபோதுதான்
அறிமுகம்...நண்பனாக.

எனக்கு மறுபடியும் விரல் சூப்ப
ஞாபகப்படுத்தியதே அவன் தான்.

பிற்பாடு... ஒரே வகுப்பில்..
அவன் மட்டும்தான் அழுதான்..
பொய் சொல்லியிருக்கிறேன் அம்மாவிடம். அவனும் அப்படித்தான்.

அவன் விடுப்பு எடுக்கும் நாட்களில்
எனக்கும் விடுப்புதான்....
எக்கச்சக்க அடிகளுடன்.

நாங்கள் இருவரும் கால்சட்டைகூட போடாமல்
காத்தாடி விட்டுக் கொண்டு ஓடியிருக்கிறோம்.

அய்யனார் கடை அஞ்சு பைசா அப்பளப்பூவை
அளந்து அளந்து காக்காய் கடி கடித்திருக்கிறோம்.

கமலுக்கும், ரஜினிக்குமாய் அடிக்கடி
கட்சி மாறியிருக்கிறோம்.

பெஞ்சு மேல் நிற்க வைத்த வாத்தியாரின் பேனாவை
தண்டவாளத்தில் வைத்திருக்கிறோம்.

பிடிக்காத பையனின் வீட்டுப்பாட நோட்டில்
கப்பல் செய்திருக்கிறோம்.

தேன்கூட்டில் கல் எறிந்துவிட்டு
திக்குத் தெரியாமல் ஓடியிருக்கிறோம்.

கொய்யாப்பழம்,கொடுக்காப்புளி திருடிவிட்டு
குட்டிச் சுவரேறிக் குதித்திருக்கிறோம்.

ஒளிந்து பிடித்து விளையாடிய இரவுகளில்
காட்டிக் கொடுக்காமல்,விட்டுக் கொடுத்திருக்கிறோம்.

விட்டு விட்டு எங்காவது சென்றிருந்தால்...
விளையாட்டாய் அடிக்கடி 'டூ' விட்டிருக்கிறோம்.

எங்களை 'மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்...'
என்ற பயல்களை இருவரும் சேர்ந்து மொத்தியிருக்கிறோம்.

நான் கஷ்டப்பட்டுப் பிடித்திருந்த தட்டான் பூச்சிகளை
அவன் தட்டி விட்டுப் பறக்க விட்டதற்காக
நிஜமாகவே ஓர் நாள்....
'காய்' விட்டு ஒதுங்கிக் கொண்டதென்னவோ நான் தான்.

எங்கள் அம்மாக்கள் பேசிக் கொண்டிருந்தபோதுகூட
நாங்கள் வேறு திசையை வெறித்துக் கொண்டிருந்தோம்
பெரிய மனிதர்கள் போல.

மறுபடியும் 'பழம்' விட்டுப் பேசியபோதுதான் சொன்னான்...
தாங்கள் வேறு ஊருக்குப் போகப் போவதாய்.

வெளியில் எதையாவது தொலைத்து விட்டு
வீட்டில் சொல்லாமல் திரிவது போல்...
வெறுமையுடன் திரிந்தோம்..எங்களைத் தொலைத்து விட்டு.

அவன் வீட்டிலும்..என் வீட்டிலும்
காலணி, பொம்மை, கலர் பென்சில் என்று
இடம் மாறிக் கிடந்த உடைமைகளைக்கூட
பரிமாறிக்கொள்ளவில்லை மீண்டும்.

எனக்கு அவன் அப்பாவும், அவனுக்கு என் அப்பாவும்
இந்த முறை பரிசளித்த ஞாபகார்த்த பொம்மைகளில்
சந்தோஷமில்லை.

ஆயிற்று...அவனும், அவன் அப்பா அம்மாவும்
'டாட்டா' சொல்லிவிட்டுக் கிளம்பியபோது...
சாலை வரை வந்து வழியனுப்பிய
என் அப்பா, அம்மா திரும்பி நடக்க...

நான் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்....
அவன் போன வண்டி
புள்ளியாய் மறையும் வரை.!!

-த.பிரபு குமரன்

Saturday, March 1, 2008

குமுதம் இதழில் கவிதைகள்-5/3/08



பயம்
-----
வெடித்து விடுமோ
என்ற பயத்திலேயே
பெரிதாக்குவதில்லை.....
பெரும்பாலான
பலூன்களையும்,
பிரச்சனைகளையும்.!!

கோலம்
--------
வீட்டுக்குள் கோலம்...
கலர் கோலத்தை
மிதித்து விட்டு வந்திருந்த
குழந்தைகளின் பாதங்கள்.!!

நம்பிக்கை
---------
சிகப்பு, பச்சை, மஞ்சள் என
வண்ண வண்ணமாய்
கைக்குட்டைகள் விற்கிறார்...
பார்வை தெரியாதவர்.!!

மண்
------
இளம் அப்பாவின்
இறுதிச் சடங்கில்
மண்பானை உடைக்கப்பட்டபோது
குழந்தைக்கு நினைவு வந்தது..
தன் மண் உண்டியல் காசுகளிலும்
அவர் குடித்து விட்டு வந்தது.!!


-த.பிரபு குமரன்.

உயிர் - 'குங்குமம் இதழ்'




கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்து பரிசளித்த.....

உயிர்
-------
எப்படியென்று
தலைக்கவசம் தயாரித்துக்
கட்டாயப்படுத்துவது......
நெடுஞ்சாலைகளில்
நசுங்கிப் போகும்
பறவைகளுக்கும்,
பட்டாம்பூச்சிகளுக்கும்.?!"

-த.பிரபு குமரன்